Viewing:

நீதி Proverbs 11

Select a Chapter

அத்தியாயம் 11

நீதியின் பயன்கள்

1கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது;

சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

2அகந்தை வந்தால் அவமானமும் வரும்;

தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்;

துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

4கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது;

நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்;

துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.

6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்;

துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.

7துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்;

அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.

8நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்;

அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;

நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.

10நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்;

துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.

11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்;

துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.

12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;

புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.

13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;

ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

14ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்;

அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.

15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்;

பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.

16நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்;

பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.

17தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்;

கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.

18துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்;

நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

19நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல,

தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.

20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்;

உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.

21கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்;

நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.

22மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண்,

பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.

23நீதிமான்களுடைய ஆசை நன்மையே;

துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.

24வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு;

அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும்

வறுமையடைபவர்களும் உண்டு.

25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;

எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்;

விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.

27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்;

தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.

28தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்;

நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.

29தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்;

மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.

30நீதிமானுடைய பலன் ஜீவமரம்;

ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும்

பாவிக்கும் எத்தனை அதிகம்.