Viewing:

சங் Psalms 109

Select a Chapter

சங்கீதம் 109

இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.

1நான் துதிக்கும் தேவனே,

மவுனமாக இருக்கவேண்டாம்.

2துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும்,

எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது;

பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.

3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு,

காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.

4என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள்,

நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.

5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள்,

என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.

6அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும்,

சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.

7அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்;

அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.

8அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்;

அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.

9அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும்,

அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.

10அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து,

தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.

11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்;

அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.

12அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும்,

அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.

13அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்;

இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.

14அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும்,

அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.

15அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்;

அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.

16அவன் தயவுசெய்ய நினைக்காமல்,

ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி,

மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்;

அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான்,

அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.

18சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்;

அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும்,

அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.

19அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும்,

எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.

20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும்,

என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.

21ஆண்டவராகிய யெகோவாவே,

நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து,

உமது கிருபை நலமானதினால்,

என்னை விடுவித்தருளும்.

22நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்,

என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.

23சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்;

வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.

24உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது;

என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.

25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து,

தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.

26என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்;

உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.

27இது உமது கரம் என்றும், யெகோவாவே,

தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.

28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்;

அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்;

உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.

29என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு,

தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.

30யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து,

அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

31தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி

அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.